இந்திராகாந்தி
விமான விபத்தில் சஞ்சய் காந்தி மரணம்
அரசியலில் இந்திரா காந்திக்குத் துணையாக இருந்தவர், அவருடைய இளைய மகன் சஞ்சய் காந்தி. இந்திராவின் அரசியல் வாரிசு என்று கருதப்பட்டவர். துணிச்சல் மிக்கவர். அரசியல் வியூகங்களை வகுப்பதில் வல்லவர். ஜனதாவை முறியடித்து, இந்திரா காந்தி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற 6 மாத காலத்தில், சஞ்சய் காந்தி எதிர்பாராத விதமாக விமான விபத்தில், 33_வது வயதில் மரணம் அடைந்தது, நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்தது.
இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தி, விமானம் ஓட்டுவதில் பயிற்சி பெற்று, விமானி (பைலட்) ஆக வேலை பார்த்தார். அரசியலில் தாயாருக்குத் துணையாக இருந்து வந்த சஞ்சய் காந்தி, “மாருதி” கார் தொழிற்சாலையைத் தொடங்கினார். அத்துடன் சிறிய விமானங்களை ஓட்டுவதற்குப் பயிற்சி பெற்றுத்தேறினார். விமான ஓட்டுவோருக்கான சங்கத்தில் (“பிளையிங் கிளப்”) உறுப்பினராக இருந்தார். காலை வேளையில், சிறிய விமானத்தில் ஏறி, டெல்லியை ஒரு சுற்று சுற்றி விட்டுத் திரும்புவது சஞ்சய் காந்தியின் பொழுது போக்கு. 1980 ஜுன் 23_ந்தேதி காலை, சிறிய விமானத்தில் ஏறி டெல்லி மீது பறந்தார்.
சஞ்சய் பயணம் செய்த விமானம் “புஷ்பக்” என்ற சிறிய பயிற்சி விமானம் ஆகும். சஞ்சய் காந்தியுடன், விமானப் பயிற்சியாளர் சக்சேனாவும் பயணம் செய்தார். விமானத்தை சஞ்சய் காந்தி ஓட்டினார். காலை 8 மணிக்கு விமானம் புறப்பட்டது. இந்திரா காந்தி வீட்டுக்கு மேல் விமானம் பறந்து சென்றது. சிறிது நேரத்திற்கெல்லாம், விமானம் நொறுங்கி விழுந்தது. “12, வெலிங்டன் கிரசென்ட்” என்ற இடத்தில் உள்ள சஞ்சய் வீட்டுக்குப் பின்புறத்திலேயே விமானம் விழுந்தது. விபத்து நடந்த இடம் பாராளுமன்றத்தில் இருந்து 2 மைல். விமானம் மூன்று முறை வட்டமிட்டதாகவும், 4_வது முறை வட்டமிடும்போது மரத்தில் மோதி நொறுங்கி விழுந்ததாகவும், விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். விபத்து நடந்த இடத்திலேயே சஞ்சய் காந்தி இறந்துவிட்டார்.
சஞ்சய் காந்தியுடன் பயணம் செய்த சக்சேனாவும் அங்கேயே மரணம் அடைந்தார். விமானம் தரையில் மோதிய வேகத்தில், சஞ்சய் காந்தியின் தலை நொறுங்கி விட்டது. கை_கால் எலும்புகள் நொறுங்கிப் போய்விட்டன. உடலில் தலை முதல் கால் வரை காயங்கள் இருந்தன. ரத்த வெள்ளத்தில் கிடந்தார். விமானம் நொறுங்கி விழுந்த செய்தி கிடைத்ததும், தீயணைக்கும் படையினர் விரைந்து சென்றார்கள். நொறுங்கிய விமான பாகங்களை உடைத்தும், அறுத்தும் உள்ளே ரத்த வெள்ளத்தில் கிடந்த சஞ்சய் காந்தியின் உடலையும், சக்சேனா உடலையும் வெளியே எடுத்தார்கள். விமானம் நொறுங்கிய தகவல், இந்திரா காந்திக்கு டெலிபோன் மூலம் தெரிவிக்கப்பட்டது. அவர், விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தார். இதற்குள் சஞ்சய், சக்சேனா உடல்கள் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு விட்டன. ஆம்புலன்ஸ் வண்டி, ராம்மனோகர் லோகியா ஆஸ்பத்திரியை நோக்கிப் பறந்தது. டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, சஞ்சய் காந்தி ஏற்கனவே இறந்துவிட்டார் என்றும், காலை 8.15 மணி அளவில் அவர் இறந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சஞ்சய் காந்தி உடல் சிதைந்து போயிருந்ததால், டாக்டர்கள் பல மணி நேரம் ஆபரேஷன் செய்து, சிதைந்த பாகங்களை ஒன்று சேர்த்து தையல் போட்டனர். நெற்றியில் பெரிய தையல் போடப்பட்டது. சஞ்சய் உடல், இந்திரா காந்தி வீட்டுக்கு பகல் 1.40 மணி அளவில் கொண்டு செல்லப்பட்டது. சஞ்சய் காந்தியின் உடலைப் பார்த்ததும் இந்திரா காந்தி துயர மிகுதியால் கதறினார். பின்னர் சோகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார். எனினும், கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. சஞ்சய் காந்தியின் உடலைப் பார்த்து, அவர் மனைவி மேனகா கதறித் துடித்தார். சஞ்சய் காந்தியின் திடீர் மரணம், இந்தியாவையே அதிர்ச்சி அடையச் செய்தது. டெல்லியில் கடைகள் மூடப்பட்டன. மந்திரிகள், “எம்.பி”க்கள், பொதுமக்கள் சாரிசாரியாக இந்திரா காந்தி வீட்டுக்குச் சென்று சஞ்சய் காந்திக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
விமானம் நொறுங்கிக்கிடந்த இடத்துக்கு, இந்திரா காந்தி இரண்டு முறை சென்று பார்த்தார். நொறுங்கிக்கிடந்த பாகங்களில் எதையோ தேடினார். (சஞ்சய் காந்தியின் கெடிகாரத்தையும், சாவிக்கொத்தையும்தான் இந்திரா தேடினார் என்றும், சுவிஸ் பாங்கியில் சஞ்சய் காந்தி கணக்கு வைத்திருந்தார் என்றும், அதன் நெம்பர் சாவியிலோ, கெடிகாரத்திலோ இருந்திருக்கலாம் என்றும், பின்னர் சில பத்திரிகைகள் எழுதின.) விபத்து நடந்தபோது, ராஜீவ் காந்தி இத்தாலி நாட்டில் இருந்தார். அவருக்கு டெலிபோனில் இந்திரா தகவல் தெரிவித்தார். உடனே, விமானம் மூலம் ராஜீவ் டெல்லிக்குப் புறப்பட்டார். மறுநாள் இறுதி ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட டிரக் வண்டியில், சஞ்சய் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மந்திரிகளும், “எம்.பி”க்களும், லட்சக்கணக்கான பொதுமக்களும் ஊர்வலத்தில் நடந்து சென்றனர். ஊர்வலம், யமுனை நதிக்கரையை அடைந்தது. அங்கு, நேரு சமாதிக்கு அருகே அமைக்கப்பட்ட “சிதை”யில் சஞ்சய் காந்தி உடல் தகனம் செய்யப்பட்டது.
சஞ்சய் காந்தியின் ஒரே மகன் வருண். சஞ்சய் இறந்தபோது, வருண் மூன்று மாதக்குழந்தை. எனவே, “சிதை”க்கு ராஜீவ் காந்தி தீ மூட்டினார். முன்னதாக, துணை ஜனாதிபதி இதயதுல்லா, பாராளுமன்ற சபாநாயகர் பலராம் ஜாக்கர், “எல்லை காந்தி” கான் அப்துல் கபார்கான், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர், தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி, மாநில முதல்_மந்திரிகள், கவர்னர்கள், மத்திய மந்திரிகள், “எம்.பி”க்கள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். “சிதை”யில் வைக்கப்பட்ட சஞ்சய் முகத்தை இந்திரா காந்தி கடைசி முறையாகப் பார்த்தபோது, துயர மிகுதியால் கதறினார்.
சஞ்சய் மனைவி மேனகா அழுதபடி மயக்கம் அடைந்தார். தனது அரசியல் வாரிசாக உருவாகி வந்த சஞ்சய் காந்தி திடீரென்று மரணம் அடைந்தது, இந்திராவுக்குத் தாங்கமுடியாத துயரம் அளித்தபோதிலும், மனதைத் திடப்படுத்திக்கொண்டார். விமானம் ஓட்டும் பைலட்டாக வேலை பார்த்த ராஜீவ்காந்தியை ராஜினாமா செய்யச்சொன்னார். அதன்படி வேலையை விட்டு விலகிய ராஜீவ் காந்தி, தாயாருடைய பணிகளில் அவருக்கு உதவியாக இருந்து வந்தார்.
இந்திராகாந்தியின் கடைசி பேச்சு
இந்திரா காந்தி கொலை செய்யப்படுவதற்கு முந்தின நாள் (30_10_1984) ஒரிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தார். 1967 தேர்தலின்போது, ஒரிசாவில் பிரசாரம் செய்த நேரத்தில்தான் அவருக்கு எதிராக பெரும் வன்முறை மூண்டு, கல்வீச்சில் படுகாயம் அடைந்தார். அவர் மூக்கில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இம்முறை, அதே மாநிலத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்றிரவு ஒரிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திரா பேசினார். அவர் பேச்சு உணர்ச்சி மயமானதாக இருந்தது. சொற்பொழிவுப்பிரிவு செயலாளர் சாரதா பிரசாத் தயாரித்துக் கொடுத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில் பேசினார்.
இந்தியாவின் பெருமை மிக்க வரலாறு சுதந்திரத்துக்காக நடைபெற்ற போராட்டம். இந்தியாவை எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் முத லியவற்றைக் குறிப் பிட்டுவிட்டு, தயாரிக்கப்பட்ட பேச்சிலிருந்து விலகி புதிதாகப் பேசத் தொடங்கினார். உணர்ச்சி மிகுதியில் குரல் தழுதழுக்க அவர் கூறினார்: “இன்று நான் இங்கிருக்கிறேன். நாளை இருப்பேனா என்று தெரியாது… என்னை சுட்டுக் கொல்ல எத்தனை முயற்சிகள் நடைபெற்றன என்பதை யாரும் அறியமாட்டார்கள். வாழ்வு, சாவு பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு இரண்டும் ஒன்றுதான். நான் கணிசமான காலம் வாழ்ந்து விட்டேன். அந்தக் காலத்தை, நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் செலவிட்டதில் பெருமைப்படுகிறேன். இது ஒன்றுதான் எனக்குப் பெருமையே தவிர, வேறு எதற்காகவும் நான் பெருமைப்படவில்லை. என் கடைசி மூச்சு உள்ளவரை நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் சேவை செய்வேன்.
நான் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்த நாட்டை வளப்படுத்தும்; பலப்படுத்தும்.” _இவ்வாறு இந்திரா காந்தி கூறினார். இந்திராவின் பேச்சை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்த மக்கள், “இந்திரா வாழ்க” என்று குரல் எழுப்பினர். அடுத்த நாள் நடக்கப்போகும் விபரீதத்தை அவர்கள் அறியவில்லை. கூட்டம் முடிந்ததும் இந்திரா காந்தி, கவர்னர் பி.என்.பாண்டேயின் இல்லத்துக்குச் சென்று தங்கினார்.
அப்போது கவர்னர், “வன்முறையால் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற பொருள்பட பொதுக்கூட்டத்தில் பேசினீர்களே. ஏன்? அதைக்கேட்டு நான் ரொம்பவும் கவலையும், அதிர்ச்சியும் அடைந்தேன்” என்று இந்திராவிடம் கூறினார். “நான் என் மனதில் பட்டதைச் சொன்னேன். என் தாத்தாவும், அம்மாவும் அணு அணுவாக இறப்பதைக் கண்ணால் கண்டு, மனம் நொந்தவள் நான். நோய்வாய்ப்பட்டு, துயரப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக சாவது மிகவும் கொடுமை. ஆரோக்கியமாக இருக்கும்போது, திடீரென்று மரணத்தைத் தழுவுவதையே நான் விரும்புகிறேன்” என்று இந்திரா பதிலளித்தார்.
இந்தச் சமயத்தில், டெல்லியில் இருந்து இந்திராவுக்கு டெலிபோன் வந்தது. பிரியங்காவும், ராகுலும் வீட்டிலிருந்து பள்ளிக்குப் போகும் போது கார் விபத்தில் சிக்கினார்கள் என்று, போனில் சோனியா தெரிவித்தார். பொற்கோவில் போரைத் தொடர்ந்து, தன் பேரக்குழந்தைகளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படலாம், அல்லது கடத்தப்படலாம் என்று இந்திரா எதிர்பார்த்தார். எனவே, விபத்தில் சிக்கினார்கள் என்ற செய்தி கேட்டு, அவர் பதற்றம் அடைந்தார். “இது சிறிய விபத்துதான். யாருக்கும் காயம் இல்லை. நன்றாக இருக்கிறார்கள். உங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே சொன்னேன். கவலைப்படாதீர்கள். திட்டமிட்டபடி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினால் போதும்” என்று சோனியா எவ்வளவோ கூறியும், இந்திராவுக்கு நிம்மதி ஏற்படவில்லை. சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டு, உடனே டெல்லிக்குத் திரும்பத் தீர்மானித்தார். அதன்படி, அவருடைய சுற்றுப்பயணம்ரத்து செய்யப்பட்டது.
இரவோடு இரவாக, விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டார். நள்ளிரவுக்குப்பின் டெல்லியை அடைந்தார். நேராக காரில் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தபோது, பேரக்குழந்தைகள் இருவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். “அவர்களுக்கு காயம் எதுவுமில்லை. கவலைப்படாதீர்கள்” என்று இந்திராவிடம் கூறினார், சோனியா. இந்திரா, தன் செயலாளர் பி.சி.அலெக்சாண்டரை அழைத்துப் பேசினார். இந்திரா மிகவும் களைப்புடன் இருப்பதைக் கண்ட அலெக்சாண்டர், பேச்சை சுருக்கமாக முடித்துக்கொள்ள விரும்பினார்.
ஆனாலும், காஷ்மீர் பற்றியும், பஞ்சாப் பற்றியும் விரிவாக விவாதித்த பிறகே, அலெக்சாண்டரை அனுப்பினார். பிறகு செயலாளர் ஆர்.கே.தவானை அழைத்தார். மறுநாள் என்னென்ன நிகழ்ச்சிகள் தனக்கு இருக்கின்றன என்று கேட்டறிந்தார். முக்கியமானவற்றைத் தவிர, மற்ற நிகழ்ச்சிகளை ரத்து செய்து விடும்படி கூறினார். நள்ளிரவு இரண்டு மணிக்குத்தான் படுக்கச்சென்றார். விடியற்காலை 4 மணிக்கு சோனியா எழுந்து பார்த்தபோது, இந்திரா ஏற்கனவே எழுந்துவிட்டதையும், குளிக்கத் தயாராகிக்கொண்டிருப்பதையும் கண்டார்.
இந்திரா காந்தி சுட்டுக் கொலை
மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான நிகழச்சி பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சியாகும். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி அவருடைய வீட்டில் பாதுகாவலர்களாலேயே (சீக்கியர்கள்) சுட்டுக் கொல்லப்பட்டார்.
சீக்கியர் பொற்கோவிலில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த போருக்குப்பிறகு, இந்திரா மீது சீக்கியர்களில் பலர் ஆத்திரம் கொண்டிருந்தனர். அதன் காரணமாக, இந்திரா காந்தியின் வீட்டில் காவல் பணியில் சீக்கியர்களை அமர்த்தக் கூடாது என்று ரகசியத்துறை டைரக்டர் கருத்து தெரிவித்தார்.
ஆனால் அந்த யோசனையை இந்திரா ஏற்கவில்லை. டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தியின் வீடு ஒரே காம்பவுண்டுக்குள் அமைந்த இரு கட்டிடங்களைக் கொண்டதாகும். இவற்றில் பிரதமர் வசிக்கும் இல்லத்தின் வாசல், சப்தர்ஜங் ரோட்டில் உள்ளது. இந்த இல்லத்தை அடுத்த கட்டிடம், பிரதமரின் அலுவலகமாகும். இதன் வாசல் அக்பர் ரோட்டில் உள்ளது.
ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்துக்குள்ள தூரம் சுமார் 300 அடியாகும். இரண்டுக்கும் இடையில் உள்ள பாதை வழியே கார் செல்ல முடியும் என்றாலும், இந்திரா நடந்தே செல்வது வழக்கம். 1984 அக்டோபர் 31_ந்தேதி காலை 8 மணிக்கு, இந்திரா காந்தி பற்றி டெலிவிஷன் படம் ஒன்றை எடுப்பதற்காக, வெளிநாட்டுப் படப்பிடிப்பாளர் ஒருவர் வந்து, பிரதமரின் அலுவலகத்தில் காத்திருந்தார். அவருக்குப் பேட்டியளிக்க இந்திரா காந்தி தன் இல்லத்திலிருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்றார்.
இரண்டு கட்டிடங்களுக்கும் இடையே ஒரு நடைபாதை உள்ளது. அதில் அவர் நடந்து செல்ல, அவருக்கு சுமார் 7, 8 அடி தூரத்தில் பாதுகாப்பு அதிகாரி தினேஷ் பட் மற்றும் 5 மெய்க்காப்பாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்னால், பிரதமரின் அந்தரங்கச் செயலாளர் ஆர்.கே.தவான் வந்து கொண்டிருந்தார். பாதையின் வலது புறத்தில் புதர் போன்ற செடிகளுக்குப் பின்னால் பிரதமரின் இல்ல பாதுகாவலர்கள் பியாந்த்சிங் (சப்_இன்ஸ்பெக்டர்), சத்வந்த்சிங் (கான்ஸ்டபிள்) ஆகியோர் நின்றிருந்தனர்.
இந்திரா காந்தி நடந்து வந்து கொண்டிருந்தபோது, பியாந்த்சிங் (வயது 33) தன் கைத்துப் பாக்கியை உருவி எடுத்து, இந்திரா காந்தியை நோக்கி ஐந்து முறை சுட்டான். அதே சமயம் சத்வந்த்சிங் (26) இயந்திரத் துப்பாக்கியால் (ஸ்டேன்கன்) சரமாரியாகச் சுட்டான். கண்மூடிக் கண் திறப்பதற்குள் இவ்வளவும் நடந்து விட்டன. இந்திரா காந்தியின் நெஞ்சிலும், வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்தன. ரத்தம் பீறிட அவர் கீழே சாய்ந்தார். (இந்திரா காந்தியை நோக்கி பியாந்த்சிங்கும், சத்வந்த்சிங்கும் திரும்பிய போது, இந்திராவின் பின்னால் வந்த மெய்க்காப்பாளர்கள் அதை கவனிக்கவே செய்தனர். ஆனால் அந்த இருவரும் இந்திரா காந்தியை நோக்கி வணங்குவதாகவே அவர்கள் நினைத்துவிட்டனர்.) இந்திரா காந்தி சுடப்பட்டு விட்டார் என்பதை தெரிந்து கொண்டதும், கொலையாளிகளை நோக்கி கமாண்டோ படையினர் சுட்டனர். இதில் பியாந்த்சிங் மரணம் அடைந்தான். சத்வந்த்சிங் படுகாயம் அடைந்தான்.
வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்த சோனியா, துப்பாக்கி சத்தம் கேட்டு அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தார். இந்திரா காந்தி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக்கண்டு “அம்மா!” என்று கதறினார். இந்திரா காந்தியை ஆஸ்பத்திரிக்கு காரில் கொண்டு சென்றார்கள். பின் இருக்கையில் இந்திரா படுக்க வைக்கப்பட்டார். அவர் தலையை, தன் மடி மீது வைத்துக்கொண்டார் சோனியா. ஆஸ்பத்திரியில் இந்திராவுக்கு அவசர “ஆபரேஷன்” நடந்தது. இந்திரா உடலில் 22 குண்டுகள் பாய்ந்திருந்தன. அவற்றில் 8 குண்டுகள் உடம்பைத் துளைத்துக்கொண்டு வெளியே சென்றிருந்தன. இந்திராவைக் காப்பாற்ற டாக்டர்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர். ஆனால் பலன் இல்லை. 2.25 மணிக்கு இந்திரா இறந்து விட்டார்” என்று டாக்டர்கள் அறிவித்தனர். எனினும் அகில இந்திய ரேடியோ மாலை 6 மணிக்குத்தான் இந்திராவின் மரணச்செய்தியை அறிவித்தது.
இந்திரா கொல்லப்பட்ட போது, ஜனாதிபதி ஜெயில்சிங் வெளிநாட்டில் இருந்தார். ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக, மேற்கு வங்காளத்துக்குச் சென்றிருந்தார். மூத்த மந்திரியான பிரணாப் முகர்ஜியும் அவருடன் இருந்தார். அவர்கள் சென்று கொண்டிருந்த காரை, ஒரு போலீஸ் ஜீப் வழி மறித்தது. “பிரதமர் வீëட்டில் ஒரு விபத்து நடந்துள்ளது. சுற்றுப் பயணத்தை நிறுத்திவிட்டு, உடனே டெல்லிக்குத் திரும்புங்கள்” என்ற செய்தி ராஜீவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே ராஜீவ் காந்தியும், பிரணாப் முகர்ஜியும் ஒரு ஹெலிகாப்டர் மூலம் கல்கத்தாவுக்குச் சென்றனர். அங்கு “இந்தியன் ஏர்லைன்ஸ்” விமானம் ஒன்று தயாராக காத்துக்கொண்டிருந்தது. அதில் இருவரும் டெல்லிக்குப் பயணமானார்கள்
ராஜீவ் காந்தி பிரதமரானார்
கல்கத்தாவில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்ட ராஜீவ் காந்தி, பெரும்பாலும் விமானிகள் அறையிலேயே இருந்தார். டெல்லியில் இருந்து, வயர்லெஸ் மூலம் அவருக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்திரா காந்தி இறந்து விட்டதாக பிற்பகல் 2.30 மணிக்கு தகவல் வந்தது. தன் உணர்ச்சிகளை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டார், ராஜீவ்காந்தி. அவர் டெல்லி போய்ச்சேர்ந்தபோது, விமானநிலையத்தில் மந்திரிகளும், காங்கிரஸ் தலைவர்களும் கூடியிருந்தனர். அடுத்த பிரதமராக ராஜீவ் காந்தியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்திருந்தனர்.
நேரு மறைந்தபோதும் லால்பகதூர் சாஸ்திரி இறந்தபோதும், மூத்த மந்திரியான நந்தா, இடைக்கால பிரதமராகப் பதவி ஏற்றார். பிறகு பிரதமர் தேர்தல் நடைபெற்றது. அதே மாதிரி தன்னை இடைக்காலப் பிரதமராக ஆக்குவார்கள் என்று பிரணாப் முகர்ஜி எதிர்பார்த்தார். ராஜீவ் காந்தியைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதை அறிந்ததும் அவர் ஏமாற்றம் அடைந்தார். எனினும், அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மன்றக் குழு (பார்லிமெண்டரி போர்டு) கூடி, புதிய பிரதமராக ராஜீவ் காந்தியை தேர்ந்தெடுக்க முடிவு செய்தது. ஆட்சி மன்றக் குழுவில் மொத்தம் ஐந்து பேர் இடம் பெற்று இருந்தனர். அவர்களில் பிரதமர் இறந்துவிட்டார். 2 பேர் அப்போது டெல்லியில் இல்லை.
நரசிம்மராவ் (உள்துறை மந்திரி), பிரணாப் முகர்ஜி (நிதி மந்திரி) ஆகிய இருவர் மட்டுமே இருந்தனர். அவர்கள் இருவரும், ராஜீவ் பெயரை அறிவித்தனர். யேமன் நாட்டுக்கு சென்றிருந்த ஜனாதிபதி ஜெயில்சிங், இந்திரா மரணச் செய்தியை அறிந்ததும் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக டெல்லிக்குப் புறப்பட்டார். அன்று மாலை டெல்லி வந்து சேர்ந்தார். அடுத்த பிரதமராக ராஜீவ் காந்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முடிவுடன்தான் அவர் வந்தார். காங்கிரஸ் தலைவர்களும் அதே முடிவில் இருக்கிறார்கள் என்பதை அறிந்ததும், ராஜீவ் காந்தி பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யுமாறு உத்தரவிட்டார். அன்று மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில், இந்தியாவின் புதிய பிரதமராக ராஜீவ் காந்தி பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி ஜெயில்சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
“இந்திரா காந்தி மந்திரி சபையில் இடம் பெற்றிருந்த மந்திரிகள் அனைவரும் தொடர்ந்து நீடிப்பார்கள். புதிய மந்திரிகள் நியமனம் இல்லை. மந்திரிகளின் இலாகாக்களும் மாற்றப்படமாட்டாது” என்று ராஜீவ் அறிவித்தார். அன்றிரவு ராஜீவ் காந்தி ரேடியோவில் பேசினார். அவர் கூறியதாவது:-
“இந்திரா காந்தி, படுகொலை செய்யப்பட்டுவிட்டார். அவர் எனக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கே தாயாக விளங்கினார். தன்னுடைய கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை, இந்திய மக்களுக்காக அவர் பாடுபட்டார். நாம் அனைவரும் துயரத்தில் முழ்கியுள்ள நேரம் இது. இந்த துயரத்தை _ சோதனையை நாம் தைரியத்துடனும், மனோ வலிமையுடனும் எதிர்கொள்ள வேண்டும். இந்திரா காந்தி மறைந்துவிட்டார். ஆயினும் அவருடைய ஆன்மா நம்முடன் வாழ்கிறது. அவருடைய ஆன்மாவுக்கு மரணம் இல்லை. நம்முடைய இந்திய நாடு, வரலாற்றுச் சிறப்பு மிக்கது. நாம் ஒற்றுமையுடன் இருந்து, இந்தியாவின் ஸ்திரத்தன்மையைக் காப்போம்.” இவ்வாறு ராஜீவ் கூறினார்.
பின்னர், ராஜீவ் தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடந்தது. இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலத்தை எவ்வாறு நடத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது. இந்திரா உடலை அன்றிரவு அவர் வீட்டில் வைத்திருந்து விட்டு, பிறகு இரண்டு நாட்கள் “தீன் மூர்த்தி” இல்லத்தில் (நேரு வசித்த வீடு) பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்கு வைத்திருப்பது என்றும், 3_ந்தேதி இறுதி ஊர்வலம் நடத்துவது என்றும், யமுனை நதிக்கரையில் நேரு சமாதி அருகே தகனம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்திரா மரணச்செய்தி டெல்லியில் காட்டுத்தீ போல பரவியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் சாரி சாரியாக வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பெண்கள் கதறி அழுதார்கள். பலர் மயக்கம் அடைந்தார்கள். இந்திரா காந்தியுடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய அவர் மருமகள் மேனகா, இந்திரா மரணச் செய்தி அறிந்ததும் ஓடோடி வந்தார். மாமியார் உடலைக் கண்டு அலறித்துடித்தார். நாள் முழுவதும் கண்ணீர் விட்டபடி சோகத்துடன் அமர்ந்திருந்தார். அன்று இந்திரா வீட்டில் இருந்த எவரும் தூங்கவில்லை.
உறவினர்கள் இந்திரா உடல் அருகே கண்ணீர் விட்டபடி அமர்ந்திருந்தனர். இந்திரா வீட்டைச் சுற்றிலும், தோட்டத்திலும், ரோடுகளிலும் ஏராளமானவர்கள் சோகத்துடன் கூடியிருந்தனர். மறுநாள் காலை இந்திரா காந்தியின் உடல் “தீன் மூர்த்தி” இல்லத்துக்குக் கொண்டு போகப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் நீண்ட “கிï” வரிசையில் நின்று, இறுதி மரியாதை செலுத்தினர். இதற்கிடையே, இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று ஆத்திரம் அடைந்தவர்கள், சீக்கியர்களின் கடைகளையும், வீடுகளையும் தாக்கினார்கள்.
ஏராளமான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பயந்துபோன சீக்கியர்கள், வீடு_வாசலை விட்டுவிட்டு பஞ்சாப் மாநிலத்துக்கு தப்பி ஓடினர். இந்த கலவரங்களில் இறந்த சீக்கியர்களின் எண்ணிக்கை சுமார் 3 ஆயிரம் இருக்கும் என்றும், டெல்லியில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பின்னர் வந்த தகவல்கள் கூறின. சுமார் 50 ஆயிரம் பேர், வீடு_ வாசலை இழந்து அகதிகளானார்கள். 2_ந்தேதி இரவு, ராஜீவ் காந்தி டெலிவிஷனில் பேசினார். “இப்போது நடைபெற்று வரும் கலவரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்தக் கலவரங்கள், இந்திரா காந்தி எந்த லட்சியங்களுக்காக வாழ்ந்தாரோ, அந்த லட்சியங்களுக்கு எதிரானவை.
கலவரம் அடங்காவிட்டால், அதை அடக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டார். வன்முறைக் கும்பலில் காலிகளும் ஊடுருவியிருந்தனர். அதனால் கலவரம் நீடித்தது. வன்முறையை ஒடுக்குமாறு ராணுவத்துக்கு ராஜீவ் காந்தி உத்தரவிட்டார். அதன்படி, ராணுவத்தினர் கலவரத்தை அடக்கினர். டெல்லியில் ராணுவத்தினர் டாங்கிகளில் ரோந்து வந்தனர். 3_ந்தேதி காலை, இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலம் நடந்தது. அவர் உடல் பீரங்கி வண்டியில் வைக்கப்பட்டு, ராணுவத்தினர் அணிவகுத்து செல்ல ஊர்வலம் புறப்பட்டது.
மகாத்மா காந்தி, நேரு ஆகியோரின் இறுதி ஊர்வலம் சென்ற அதே பாதையில், இந்திராவின் இறுதி ஊர்வலமும் சென்றது. கலவர சூழ்நிலை காரணமாக, ஊர்வலத்தை காண ரோட்டின் இருபுறமும் கூடியிருந்தவர்கள் எண்ணிக்கை முன் அளவுக்கு இல்லாமல் குறைவாகவே இருந்தது. யமுனை நதிக்கரையில், காந்தி, நேரு ஆகியோரின் சமாதிகள் உள்ள இடத்திற்கு அருகே, சாந்தி வனம் என்ற இடம் இந்திரா காந்தியின் உடல் தகனத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது.
ஊர்வலம் அந்த இடத்தை அடைந்ததும், இந்திராவின் உடல் பீரங்கி வண்டியில் இருந்து இறக்கப் பட்டு, சந்தனக் கட்டைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த “சிதை”யில் வைக்கப்பட்டது. இங்கிலாந்து பிரதமர் மார்க்கரெட் தாட்சர், ஜப்பான் பிரதமர் நாக சோனே, பாகிஸ்தான் அதிபர் ஜியா, வங்காள தேச அதிபர் எர் ஷாத், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா, பாலஸ்தீன தலைவர் அராபத் மற்றும் ஜாம்பியா, உகாண்டா, பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், மாநில முதல்வர்கள், கவர்னர்கள், அன்னை தெரசா, திரை உலகப் பிரமுகர்கள் வந்திருந்து இந்திராவுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். (இந்த சமயத்தில், தமிழக முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று, மாற்று சிறுநீரகம் பொருத்த ஏற்பாடு நடந்து வந்தது. இந்த நிலையில், இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட தகவலை அறிந்தால், அவர் உடல் நிலை மேலும் மோசமடையும் என்பதால், அந்தத் தகவல் அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை.)
தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், ராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, மரியாதை செலுத்தினர். பின்னர், “சிதை”க்கு ராஜீவ்காந்தி தீ மூட்டினார். “சிதை” எரிந்த போது, கூடியிருந்தவர்கள் “இந்திரா அமரர் ஆனார்”, “இந்திராவின் புகழ் வாழ்க” என்று குரல் எழுப்பினர். மறுநாள் இந்திராவின் அஸ்தி (சாம்பல்) பல கலசங்களில் சேகரிக்கப்பட்டது. அஸ்தியின் ஒரு பகுதி திரிவேணி சங்கமத்தில் கரைக்கப்பட்டது. “நான் இறந்தபின், என் அஸ்தி இமயமலை மீது தூவப்பட வேண்டும்” என்று தன் விருப்பத்தை இந்திரா காந்தி ஏற்கனவே ராஜீவ் காந்தியிடம் தெரிவித்திருந்தார். அதன்படி, தாயாரின் அஸ்தியின் ஒரு பகுதியை, இந்திய விமானப்படை விமானத்தில் ராஜீவ் காந்தி எடுத்துச்சென்று, இமயமலைச் சாரலில் தூவினார்.
9 உலகத் தமிழ் மாநாடு
‘உலகத் தமிழ் மாநாட்டை புறக்கணியுங்கள்!’- தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்
”என்னை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். எத்தனை கணைகள் வந்தாலும் என் வழியில் நான் போய் கொண்டிருப்பேன். வந்த கணைகள் தேயலாம். என் உள்ளம் தேயாது”(தமிழக முதல்வர் கருணாநிதி”)
டொரண்டோ: தமிழ் ஈழ நிலத்தில் தமிழர்கள் ரத்தம் சிந்தும் இந்த வேளையில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள கோவை உலகத் தமிழ் மாநாட்டை முழுமையாகப் புறக்க வேண்டும் என உலக தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கை:
‘பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்க தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்தானாம்….’ அதைத்தான் முதல்வர் கருணாநிதி இப்போது செய்ய நினைக்கிறார்.
வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆறாக ஓடிய தமிழ் மக்களின் குருதி காயுமுன்னர்- அவர்கள் சொரிந்த கண்ணீர் வற்று முன்னர்- முதல்வர் கருணாநிதி ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கடைந்தெடுத்த இரண்டகமாகும்!.
இந்த மாநாடு தமிழ்மொழிக்கு சீரும் சிறப்பும் எழுச்சியும் ஏற்றமும் தர நடத்தப்படவில்லை. தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையேனும் உலகத் தமிழ் மாநாடு இடம்பெறவில்லை என்ற குறையைத் தீர்க்கவே முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டை நடத்துகிறார். இன்னொரு காரணம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுப் பழியைத் துடைத்துக் கொள்ள உலகத் தமிழ் மாநாடு கைகொடுக்கும் என நினைக்கிறார்.
உலகத் தமிழரை ஏமாற்ற…
தமிழகத்தில், தமிழ் ஆட்சி மொழியாகப் பெயரளவில் மட்டும் இருக்கிறது. பள்ளிக் கூடங்களில் தமிழ் கற்பிக்கும் மொழியாக இல்லை. அரசு அலுவலகங்களில் தமிழ் இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. வழிபாட்டில் தமிழ் இல்லை. அங்காடிகளின் பெயரில் தமிழ் இல்லை.
இந்திய நாடாளுமன்றத்தில் அமைச்சர் அழகிரி தமிழில் பேசுவதற்கு அனுமதியில்லை. இப்படி எங்கும் எதிலும் தமிழ் இல்லை என்ற கண்றாவிக் காட்சியே தமிழகத்தில் உள்ளது. இந்த அழகில் முதல்வர் கருணாநிதி உலகத் தமிழ்நாடு நடத்த நினைப்பது உலகத் தமிழரை ஏமாற்றும் எத்தனமாகும்.
‘வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்’ என எதுகை மோனையில் பேசும் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த பலருக்குத் தமிழில் பெயரில்லை. அழகிரி, ஸ்டாலின், கலாநிதி, தயாநிதி, உதயநிதி, அறிவுநிதி எல்லாமே கலப்புமொழிப் பெயர்கள்.
முதல்வர் கருணாநிதியின் பேரர்களுக்குச் சொந்தமான ‘சன்’ தொலைக்காட்சியில் தமிங்கிலம் கோலோச்சுகிறது. தூய தமிழுக்கு அதில் மருந்துக்கும் இடம் இல்லை. தமிழினப் பகைவர்கள்தான் அதில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.
மரணரப் படுக்கையில் தமிழினம்…
ஆண்டுக்கணக்காக சிங்கள ராணுவம் மேற்கொண்ட இனவழிப்புப் போரில் ஒரு இலக்கம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். முள்ளி வாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரில் மட்டும் 25,000 மக்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் உணவு, மருந்து இன்றி பல மாதங்கள் பதுங்கு குழிகளுக்குள் அடைந்து கிடந்தனர். சீனா, பாகிஸ்தான் , உருசியா உள்ளிட்ட நாடுகளின் வானூர்திகள் மருத்துவமனைகள் மீதும் பள்ளிகள் மீதும் வீசிய குண்டுகளில் அப்பாவித் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். போரில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வந்தபோது மீண்டும் குண்டு வீசப்பட்டு கொல்லப்பட்டார்கள்.
முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் வகைதொகையின்றி எதிரியின் பல்குழல் பீரங்கித் தாக்குதலில் பொட்டுப் பூச்சிகள் போல் கொல்லப்பட்ட போது முதல்வர் கருணாநிதி டெல்லியில் முகாமிட்டு மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.
போரில் தப்பிய மூன்று லட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் ஆடு மாடுகள் போல் அவர்களது விருப்பத்துக்கு மாறாக- சட்டதிட்டங்களுக்கு முரணாக- திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். துப்பாக்கி ஏந்திய சிங்கள ராணுவத்தினர் காவலுக்கு நிற்கிறார்கள். மக்களது நடமாடும் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தவணை முறையில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
‘விலங்குகளை அடைத்து வைத்துள்ளது போல, அப்பாவித் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் வனவிலங்குக் கொட்டகைகளில் அடைத்து வைத்துள்ளனர்’ என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனிதவுரிமை ஆர்வலர் மருத்துவர் எலின் சந்தர் வேதனை தெரிவித்திருக்கிறார். அந்த யூத இனப் பெண்ணுக்கு இருக்கும் கவலை முதல்வர் கருணாநிதிக்கு இல்லை. இந்திய அரசு எலின் சந்தருக்கு முதலில் விசா வழங்கிவிட்டுப் பின்னர் மறுத்துவிட்டது!
இந்தியத் தலைவர்கள் அடிக்கடி இலங்கை சென்று திரும்பியது போரை நிறுத்துவதற்காக அல்ல என்றும் தமிழ் மக்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை புரிந்த சிங்கள பயங்கரவாத அரசைப் பாராட்டுவதற்காகத்தான் என்றும் ‘மை டெலிகிராப்’ நாளிதழில் உலகின் தலைசிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவரும் மனித உரிமை ஆர்வலருமான ரிச்சர்ட் டிக்சன் எழுதியுள்ளார். மேலும் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
திறந்த வெளிச் சிறைச்சாலைகளில்…
திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்குப் போதிய உணவில்லை, தண்ணீர் இல்லை, மருந்து இல்லை. கழிப்பறை வசதி இல்லை. சின்னச் சின்ன கூடாரங்களில் வானமே கூரையாகவும் கட்டாந்தரையே பாயாகவும் படுத்து உறங்கி எழுகிறார்கள். தொடக்கத்தில் சமைத்த உணவு வழங்கப்பட்டது. இப்போது அரிசி, மா இரண்டையும் கொடுத்து சமைத்துச் சாப்பிடச் சொல்கிறார்கள்.
சமைப்பதற்கு விறகு வேண்டும். விறகு விற்றவர்கள் மீது சிங்கள ராணுவம் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
இந்த வதை முகாம்களில் நடைபெறும் சித்திரவதைகளைப் பார்வையிட ஐ.நா. உட்படப் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியில்லை. ‘இந்து’ ராம் தவிர ஏனைய ஊடகவியலாளர்களுக்கு அனுமதியில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதியில்லை. தென் தமிழீழத்தில் செயல்பட்டுவந்த செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்கள் இலங்கை அரசின் கட்டளைக்கு இணங்க மூடப்பட்டுவிட்டன.
புலம்பெயர் தமிழர்கள் வணங்காமண் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 884 டன் உணவு, உடை, மருந்து இன்றுவரை முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள அந்த மக்களைச் சென்றடையவில்லை.
குற்றம்சாட்டுகிறோம்…
எமது உறவுகளின் அவலத்துக்கும் அல்லல்களுக்கும் இலங்கை அரசுக்கு ஆயுதம், போர்க் கப்பல்கள், ராடார், பயிற்சி, புலனாய்வு, நிதி போன்றவற்றை வழங்கி தமிழ் மக்களுக்கு எதிரான போரை திரைக்குப் பின்னால் இருந்து இந்திய அரசுதான் நடத்தியது என நாம் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறோம். அதற்குத் திமுக அரசு துணை போனது எனக் குற்றம் சாட்டுகிறோம். காங்கிரஸ் தலைவி சோனியா, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் , தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரது கைகளில் ஈழத் தமிழர்கள் கொட்டிய குருதிக் கறை படிந்துள்ளது எனக் குற்றச் சாட்டுகிறோம்!
ஐ.நாவின் மனித உரிமை அவையில் ஸ்ரீலங்கா அரசு மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்குலக நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசு வாக்களித்தது தமிழ்மக்களுக்குச் செய்த இரண்டகம் எனக் குற்றம் சாட்டுகிறோம்!
தமிழினப் படுகொலையை கன கச்சிதமாக நிறைவேற்றிய மகிந்த ராஜபச்சே அரசுக்கு சர்வதேச நிதியம் கடன் கொடுப்பதை மேற்குலக நாடுகள் எதிர்த்தபோது ‘நீங்கள் கொடுக்காவிட்டால் நாங்கள் கொடுப்போம்’ என இந்தியா சொன்னது வெட்கக் கேடானது எனக் குற்றம் சாட்டுகிறோம்!.
முதல்வர் கருணாநிதி அரங்கேற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகல், உண்ணா நோன்பு, மனிதச் சங்கிலி, பொதுக் கூட்டங்கள், சட்டசபைத் தீர்மானங்கள், தந்திகள், கடிதங்கள் எல்லாமே வெறும் நாடகம் என குற்றம் சாட்டுகிறோம்!.
“இலங்கைத் தமிழர்கள் பெற வேண்டிய ஈழத்தை பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்வோம்” என அப்போலோ மருத்துவமனையில் படுத்தபடியே முதல்வர் விட்ட அறிக்கை ஒரு ஏமாற்று வித்தை எனக் குற்றம் சாட்டுகிறோம்!
இன மானமா? பதவியா? என வந்தபோது பதவிதான் முக்கியம் என முதல்வர் கருணாநிதி முடிவெடுத்தார் எனக் குற்றம் சாட்டுகிறோம்!.
தமிழீழம் பற்றி முதல்வர் கருணாநிதி அடிக்காத குட்டிக் கரணமே இல்லை எனலாம். 1985ம் ஆண்டு மதுரையில் தமிழீழ ஆதரவாளர் அமைப்பு நடத்திய மதுரை மாநாட்டில் வாஜ்பாய் உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில இலங்கைத் தமிழர்களின் மூலாதார முழக்கமான தமிழ் ஈழத்திற்கு ஆதரவு அளிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
ஒரு நாள் பார்த்து தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்பார். அடுத்த நாள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்க ஆதரவு இல்லை, ஆதரவை எப்போதோ திமுக விலக்கிக் கொண்டுவிட்டது என்பார். ஒரு நாள் பிரபாகரன் எனது நண்பர் என்பார். மறு நாள் அவர் ஒரு பயங்கரவாதி, சர்வாதிகாரி, சகோதர யுத்தம் செய்தவர் என வசை பாடுவார்.
இன்று “இனித் தமிழ் ஈழம் பற்றிப் பேசி பயனில்லை, மாறாக தமிழர்களுக்கு சம உரிமை, தமிழுக்கு சம தகுதி, தமிழர் வாழும் பகுதிகளுக்கு அதிகாரப்பகிர்வு போன்ற கோரிக்கைகளையே வலியுறுத்த வேண்டும். தவிரவும் மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக பன்னாட்டு அளவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே மீது விசாரணை வேண்டும் என்பன போன்ற வேண்டுகோள்களை முன்வைக்காமல், சிங்களவர்களுக்கு ஆத்திரமூட்டும் படி எதுவும் பேசாமல், சிங்கள பெளத்த துறவிகள் கூட நம் மீது கோப அக்னியை வீசக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள், தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நீக்குபோக்குடன் நம்முடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்” என்று முதல்வர் பேசியுள்ளார். பேசியது சந்துமுனை அல்ல தமிழக சட்டமன்றம்!.
மூன்று மணி நேரம் உண்ணாநோன்பு நோற்று ‘ராஜபக்சே போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டார்’ என்று சொல்லி உண்ணா நோன்பை முடித்து சாதனை படைத்தவர் கருணாநிதி ஒருவர்தான்.
அவரிடம் ‘இன்று காலையில் கூட விடுதலைப் புலிகள் மீது கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடைபெற்றதாக செய்திகள் வந்திருக்கிறதே?’ என்று செய்தியாளர்கள் கேட்டபோது ‘மழை விட்டும் தூவானம் விடவில்லை’ என்று பதில் உரைத்தது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!.
தமிழ்நாட்டுக்கு அகதிகளாக ஓடிவந்த ஈழத் தமிழர்களை செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் ஆண்டுக்கணக்காக அடைத்து வைத்து அழகுபார்க்கும் ஒரே முதல்வர் கருணாநிதிதான்!.
இந்திய அரசினாலும் தமிழக அரசினாலும் ஈழத் தமிழ் அகதிகள் மிகக் கேவலமாக நடத்தப்படுகிறார்கள். திபெத் ஏதிலிகளை வீடுகளில் குடிவைத்துவிட்டு தமிழ் அகதிகளை மாட்டுத் தொழுவங்களில் அடைத்து வைத்திருக்கிறது இந்திய அரசு!.
தமிழீழ மக்களுக்காகக் குரல் கொடுத்த தமிழ் உணர்வாளர்கள் இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி, தஞ்சை மணியரசன், நாஞ்சில் சம்பத், கோவை ராமகிருஷ்ணன் போன்றோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது அதிகார வெறியல்லவா?.
வெந்த புண்ணில் வேலைச் சொருகுகிறார்…
வெந்த புண்ணில் வேலைச் சொருகுவதில் முதல்வர் கருணாநிதி கெட்டிக்காரர். “இலங்கையில் இப்போது சுமூக நிலை ஏற்பட்ட விட்டப் பிறகும் கூட அந்தச் சிக்கலைக் கிளறிவிட்டுக் கொண்டிருப்பவர்களை எனக்குத் தெரியும்” என முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது தமிழர்கள் அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது.
ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை, மூன்று லட்சம் மக்கள் முள்வேலி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உணவு, குடிநீர் மருந்தில்லாமல் நாளும் செத்துக் கொண்டிருக்கிறார்களே.. அதற்குப் பெயர் இயல்பு நிலையா?.
தமிழர்களுக்குத் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எதுவும் இல்லை என்று கூறித் தமிழர் தாயகத்தில் பெளத்த விகாரைகளைக் கட்டி சிங்களவர்களைக் குடியேற்றி சிங்கள மயப்படுத்துவதற்குப் பெயர் இயல்பு நிலையா? எது இயல்பு நிலை?
கொண்ட கொள்கையில் சறுக்குவது என்று முடிவெடுத்து விட்டால் நொண்டிச் சாக்குகளும் சப்பைக் கட்டுகளும் வண்டி வண்டியாய் வரத்தான் செய்யும்!
தமிழீழ மக்கள் விடுதலை பெற்று பாதுகாப்போடும் மானத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழும் நிலை ஏற்படும் வரை முதல்வர் கருணாநிதி நடத்த இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என அன்போடு வேண்டிக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது